Gardening Tips to remove ants Benefits of Turmeric water

 சிவப்பு எறும்பு என்று வரும் போது சிறிய பெரிய வகை உள்ளது. வீட்டில் அதிகமாக இனிப்பு பண்டங்களில் சிறிய வகையே பெரும்பாலும் காணப்படும். இந்த வகை செடிகளில் காணும் போது அவை செடியில் உள்ள பூ, காய்களை அரித்துண்ணும்.


பெரிய எறும்பில் முசுறும் ஒன்று. அதிகமாக மாமரத்தில் காணப்படும். இவை மற்ற பூச்சி புழுக்களை உண்ணும் தன்மை கொண்டது.


வெண்டையில்  சிறு  எறும்பு பூக்களை காய்களை பாதிக்கிறது என்றால் மஞ்சள் தூள் கரைசல் நல்ல பலனைத் தரும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பிரச்சனை தீரும் வரை தெளிக்கவும். நான்கைந்து தெளிப்பிற்கு ஒரு முறை மஞ்சள் தூளுடன் பட்டாணி அளவு வெற்றிலைச் சுண்ணாம்பு கலந்து ஒன்று அல்லது இரு முறை தெளிக்கவும். சுண்ணாம்பின் காரத்தன்மை அதாவது எரிக்கும் சக்தி பூச்சி புழுக்களை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பை அளவிலும் சரி அடிக்கடி தெளிப்பையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.


உப்பு களைச் செடிகளை கட்டுப்படுத்த பயன்படுத்துவர். ஆகையால் நீங்கள் எறும்பிற்காக பயன்படுத்த விரும்பினால் உட்பு கரைசலை களைச் செடி மேல் தெளித்து பார்த்த பின் முதன்மை செடிக்கு தெளிக்கவும். உப்பு கரைசல் நீர்த்த நிலையில் இருப்பது மிக அவசியம். தொடர்ந்து பயன்படுத்தும் போது வேறு விளைவுகள் ஏற்படுத்துமா என்பது தெரியாது.


மஞ்சள் தூள் கரைசல் எறும்பை கட்டுப்படுத்தும். வெண்டையில் ஏற்படும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்துவதுடன் வெயிலுக்கு செடியை கடினப்படுத்தவும் செய்கிறது.