உயிர்வேலி...

 உயிர்வேலி என்பது நமது நிலத்தை காக்கும்பொருட்டு உயிரற்ற கம்பியால் வேலி போடாமல் உயிருள்ள மரங்களால் வேலி அமைப்பதே உயிர்வேலி ஆகும். உயிர்வேலி அமைப்பதன் அவசியம் என்னவென்றால் விலங்குகளிடமிருந்தும் (நடப்பன, ஊர்வன) மனிதர்களிடமிருந்தும் நமது நிலத்தை காக்கும் பொருட்டு அமைக்கப்படுவது. மேலும் இந்த உயிர்வேலியானது மண் அரிப்பை தடுத்தும்,பண்ணையாளரின் அனுமதி இல்லாமல் வாயிலை தவிர வேறு வழியில் வெளி ஆட்கள் பண்ணையின் உள்ளே நுழைய இயலா வண்ணம் அமைந்த ஒரு முள் வேலியாகவும், பல உயிர்கள் வாழும் இடமாகவும், பல உயிர்களுக்கு உணவு கிடைக்கும் ஒரு உணவு தொழிற்சாலையாகவும், மனிதர்களின் பழத்தேவையை பூர்த்தி செய்யும் ஒரு உணவுக்காடாகவும், கால்நடைகளின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் பசுந்தீவனமாகவும், விறகுக்காகவும், மரச்சாமான்களுக்காகவும், பசுந்தாள் உரத்திற்காகவும், பருத்தியின் மூலம் உடை தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்கு தேவைப்படும் மூலிகைகள் அடங்கிய மூலிகைக்காடாகவும் பயன்படுகிறது.


வீட்டு தோட்டம் அமைப்பவர்களுக்கான உயிர்வேலி


பாச்சான், கொட்டைச் செடி, கள்ளி,அகத்தி, சூபா புல், சவுண்டல், கிளைரிசீடியா, மரக்கிளுவை, மல்பெரி, செடி முருங்கை, கல்யாண முருங்கை.,,,(இன்னும் சில)


விவசாயம் செய்பவர்கள் ஐந்து அடுக்கில் இயற்கை வேலி அமைப்பது நல்லது. அவர்களுக்கான வழிமுறை


முதல்வரிசை முள் நிறைந்த வேலி மற்றும் உணவுபொருள் மற்றும் ஆட்டுத்தீவனம்

இலந்தை, களாக்காய், (கிளக்காய்),கோணக்கா (கொடுகழிக்கா அல்லது கொடுக்காய் அல்லது கொடுக்கா புள்ளி), காரை முள், சூரை முள்,வில்வம், சப்பாத்திக்கள்ளி, முள் கிளுவை, சூடான் முள், முள் கள்ளி, பரம்பை முள், கருவேல்,குடைவேல்,காக்கா முள், சங்க முள், யானைக்கற்றாழை.,,,(இன்னும் சில)


இரண்டாம் வரிசை பறவைக்கான உணவு மற்றும் அதன் வீடு மற்றும் மனிதர்களுக்கான உணவுக்காடு

ஆலமரம், அரச மரம், அத்தி மரம், நாவல், இலுப்பை, கோடை ஆப்பிள், சிங்கப்பூர் செர்ரீ (சர்க்கரை பழம்), வேம்பு, கொய்யா, மாதுளை, மா, பலா, சீத்தா, பேரீச்சை, ஈச்ச மரம், நெல்லி, புளிய மரம், சப்போட்டா, முந்திரி, ஆரஞ்சு, சாத்துக்குடி, நார்த்தங்காய், பேரிக்காய், எலுமிச்சை, விளாம் பழம்,பாதாம், தென்னை, பனைமரம்,பாக்கு மரம்.,,,(இன்னும் சில)


மூன்றாம் வரிசை வருங்கால வைப்பு நிதி மற்றும் விறகு மற்றும் பசுந்தாள்உரம் மற்றும் வனக்காடு

சவுக்கு, மூங்கில், சில்வர் தேக்கு, மலைவேம்பு,குமிழ், வேங்கை, புங்கை மரம், புன்னை மரம், வேங்கை, கடம்பு,தீக்குச்சி மரம், வாகை,சந்தனம் ,தேக்கு,ரோஸ்வுட் ,செஞ்சந்தனம் ,கொன்றை, மருதம், கருங்காலி, உசிலை, தடசு, மந்தாரை, நீர் மருது, மஞ்சணத்தி, பூவரசு, மகிழ மரம், வன்னி மரம்,.,,,(இன்னும் சில)


நான்காம் வரிசை கால்நடை தீவனம்

அகத்தி, சூபா புல், சவுண்டல், கிளைரிசீடியா, மரக்கிளுவை, மல்பெரி, செடி முருங்கை, கல்யாண முருங்கை.,,,(இன்னும் சில)


ஐந்தாம் வரிசை மூலிகை மற்றும் பூச்சிவிரட்டி மற்றும் உணவுபொருட்கள்

அன்னாசி பழம், பிரண்டை, தூதுவளை, முடக்கற்றான், பண்ணைகீரை, கருவேப்பிலை,கோவக்காய், திராட்சை (முடிந்தால்), வெற்றிலை, செம்பருத்தி ,வெட்டி வேர், லெமன் கிராஸ்,கற்பூர வள்ளி (ஓம வள்ளி), பூனை மீசை, மருதாணி, சோற்றுக்கற்றாழை,நிலவேம்பு ,சிறியா நங்கை, பெரியாநங்கை,முசுமுசுக்கை, திருநீற்றுப்பச்சிலை ,துளசி, துத்தி, தும்பை, குப்பைமேனி,கீழாநெல்லி, அம்மான் பச்சரிசி, ஆடாதோடை, ஆடு தின்னாப்பாளை, நொச்சி, ஆவாரை, ஊமத்தை,நெய்வேலி காட்டாமணக்கு, ஆமணக்கு,எருக்கு,நீர்முள்ளி, சிறுகண்பீளை, சிறுநெறிஞ்சிமுள் ,வேலிப்பருத்தி.,,,(இன்னும் சில).


இட்டேரி என்பது உயிர்வேலிப் பாதை. இருபுறமும் அடர்ந்த உயிர்வேலி, நடுவில் பாதை இருக்கும். கள்ளி வகைகள்,முள்ளுச்செடிகளுக்கு இடையே வேம்பு, மஞ்சகடம்பு, நுணா, பூவரசு போன்ற மரங்கள், நொச்சி,ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடி வகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடி வகைகள் மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகளும் இந்த உயிர்வேலியில் நிறைந்திருக்கும்.


இவை விவசாய நிலங்களைக் காத்து வந்தன. இந்த உயிர்வேலியில் கறையான் புற்றுகள், எலி வலைகள் நிறைய காணப்படும். நிழலும், ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் இந்தப் பகுதியில் காணப்படுவதால், இந்தப் பகுதியில் எண்ணற்ற பூச்சியினங்களும் வாழ்ந்து வந்தன. இவற்றை உணவாக உட்கொண்டு வண்டுகள், நண்டுகள், பாம்புகள், பாப்பிராணிகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள், அலுங்குகள் என்று பல உயிர்கள் வாழ்ந்தன. இந்த உயிர்களை உண்ண பாம்புகள், பருந்துகள், நரிகள் போன்ற உயிர்கள் இருந்தன.


கோவைப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம் போன்ற கனி வகைகளும், கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக் கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருள்களும், மூலிகைகளும் கிடைத்தன.


இந்த உயிர்வேலியில் வாழ்ந்த குருவிகள், ஓணான்கள், தவளைகள் ஆகியவை சேர்ந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் பல்வேறு வகை பூச்சிகளை அழித்தன. பாம்புகள்,ஆந்தைகள் போன்ற உயிரினங்கள் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தின.


பறவைகளின் எண்ணிக்கையைப் பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின. பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின. மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின.


விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறத்தொடங்கி உயிர்வேலிகள் அழிக்கப்பட்டன. மிஞ்சி இருக்கும் விவசாய நிலங்களிலும் உயிர்வேலிகளை அழித்து காக்கா குருவிகூட கூடுகட்ட முடியாத அளவிற்குக் கம்பிவேலிகளை அமைத்துவிட்டோம்.


உயிர்வேலி என்ற பெயரில், அங்கே நாம் வளர்க்கும் மரங்கள், செடிகள், கொடிகள், புதர்கள் என்று அனைத்தாலும் நமக்குக் கிடைக்கும் பலன்கள் ஒன்றல்ல, இரண்டல்ல! முடிந்தவரை முயற்சித்திருக்கிறேன்.


பயன்கள் பட்டியல் இதோ


ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் தரும் மரங்கள் (சூபாபுல், கருவேல்) வளர்க்கலாம்.

மண்ணுக்கு வளம் சேர்க்க பசுந்தாள் உரம் தரும் செடி, கொடி, மரங்கள் (ஆவாரை, எருக்கு இலை, ஆடுதொடா இலை) வளர்க்கலாம்.

பாம்பு போன்ற விஷஜந்துகள் வீடு கட்டி, சந்தோஷமாக வாழ்ந்து நமக்கு தீமை செய்யும் எலி போன்ற உயிரினங்களை அழிக்கும் வகையில் புதர்களை வளர்க்கலாம்.

பக்கத்து வயல் பங்காளி வரப்பு வெட்டும்போது கொஞ்சம் கொஞ்சமாக நமது நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்ளாமல் இருக்க, அணைபோடலாம்.

அடையாளம் தெரியாத பறவைகளை ஈர்த்து, அவற்றுக்கு உணவு கொடுத்து (அத்தி, நாவல்) பண்டமாற்று மூலம் வெவ்வேறு விதைகள் மற்றும் எச்சங்களை உரமாகப் பெறலாம்

பயிர் பாதுகாப்புக்குப் புழு, பூச்சிகளைத் தின்னும் ஓணான் மற்றும் பறவைகளை ஈர்க்கலாம்.

காற்றானது நம் நிலத்துக்குள்ளே புகுந்து செல்லும்போது ஈரத்தை காவு கொண்டு சென்று விடாமல் தடுக்கலாம்.

புயல்காற்று போன்ற ஆபத்தான காலங்களில் காற்றின் வேகத்தை தடுத்து, சேதத்தைக் குறைக்கலாம்.

மழைக் காலங்களில் சத்துமிக்க மேல்மண் அரித்துச் செல்லாமல் தடுக்கலாம்.

வீட்டின் எரிபொருள் தேவையைச் சமாளிக்கலாம்.

கூந்தல்பனை பூ, ஈஞ்சி போன்ற அழகுப் பொருட்கள், வெள்ளெருக்கு பூ போன்ற பூஜை சாதனங்களைப் பெறலாம்.

அரப்பு, பூச்சை கொட்டைக் காய் போன்ற இயற்கை ‘ஷாம்புகள்’ தயாரிக்கலாம்.

மனிதர்களுக்கும், ஆடு மாடுகளுக்கும் தேவை யான மூலிகைச் செடிகளையும், மரங்களையும் (நொச்சி, சோற்றுக் கற்றாழை போன்றவற்றுக்காக விளைநிலத்தை தனியாக ஒதுக்கத் தேவையிருக்காது) வளர்க்கலாம்.

கோடைக் காலங்களில் வெப்பத்தின் தாக்கத்தை சரிகட்ட நுங்கு போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருட்களை எந்தவித செலவோ, பராமரிப்போ இல்லாமல் பெறலாம்.

கற்றாழை போன்ற செடிகளை வளர்த்து, விவசாய வேலை இல்லாத நாட்களில் கயிறு திரிப்பது போன்ற வேலைகளை கொடுக்கலாம்.

எதிர்பாராத அவசரச் செலவுக்கு மரங்களை வெட்டி விற்றுச் சமாளிக்கலாம்.

இலையுதிர் காலங்களில் இலவசமாக வருடந்தோறும் மூடாக்குப் பெறலாம்.

தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும்போது வேலி ஓரங்களில் நடந்தால் தூய்மையான பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) சுவாசித்து, உடல்நலத்தை மேம்படுத்தலாம்.

தேனீக்கள் போன்றவை இருந்தால், தோட்டத்துக்கு மகரந்தம், நமக்கு தேன் என நன்மைகளைப் பெறலாம்..

Winged Beans சிறகு அவரை

 Winged bean என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்த காய்கறி தாவரம் கிழக்காசியாவில் பெரிதும் விரும்பி வளர்க்கப்படும் கொடி தாவரமாகும். இந்த தாவரத்தின் இலை அவரை போன்று இருப்பதால் இதை அவரை ரகமாக கருதி winged bean தமிழாக்கமாக சிறகு அவரை என்றும், இந்த காயிற்கு நான்கு பட்டை/பக்கங்கள் இருப்பதால் காரணப் பெயராக சதுர அவரை என்றும் குறிக்கப்படுகிறது.

Winged Beans


நாட்டு மருத்துவத்தில் செடியின் அனைத்து பாகங்களை குறிக்கும் விதமாக சமூலம் என்று வார்த்தையை பயன்படுத்துவர். இத்தாவரத்தின் அனைத்து பாகங்களும் வேரிலிருந்து செடியின் நுனி வரை அனைத்தும் மருத்துவ குணங்களை கொண்டிருப்பதால், கீழை நாடுகளில் அதிகமாக பயிரப்படுகிறது.


விதை மற்றும் கிழங்குகளைக் கொண்டு பயிர் பெருக்கம் செய்யலாம். கிழங்கையும் சமைக்கலாம்.


இது பல்லாண்டு தாவரமாகும். காய்ப்பு முடிந்ததும் கவாத்து செய்து செடியை பராமரித்து வந்தால் , உரிய நேரத்தில் காய்க்க ஆரம்பிக்கும். அப்படியே செடி பட்டு போனாலும், மண்ணில் உள்ள கிழங்கின் மூலமாக மழை வந்ததும் துளிர்ந்து வளரும்.


Cool climate crop என்று குறிக்கப்படும் தாவரம் ஒரு சம்பா ரக பயிராகும். ஆடிப் பட்டத்தில் விதைத்தால் நவம்பரில் காய்க்க ஆரம்பிக்கும்.

பட்டம் தப்பி பயிர் செய்தால் சம்பா பருவத்தில் காய்க்காமல் அடுத்த சம்பா பருவத்தில் தான் .காய்க்ரும்.

இதில் 5 ரகங்கள் உள்ளது.


பச்சை குட்டை

பச்சை நீளம்

ஊதா குட்டை

வரி குட்டை

நீண்ட நீள பச்சை ரகம்.

இலைத்தேள் கடியும் அதன் வைத்திய முறையும் the truth behind the leaf scorpion viral video

ஜெனி கார்த்திக்கு  நிகழ்ந்த அனுபவம்🌿🌿

இடம்: லைபீரியா


நம் குழுவிலேயே இதற்கு முன் இளைத்தேள் என ஒரு காணொளி சுற்றிக் கொண்டிருந்தது.. அதில் சில உண்மையும் இருக்கிறது..


கை வைத்தியம் :

--------------------

நேற்று என் மனைவியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டே வீட்டு தோட்டத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த இடத்தில் மிளகுக் கொடி, கொடி ரோஜா, பிரண்டை, சிவப்பு பசலை, தரையில் இஞ்சி என அனைத்தும் புதராக இருந்தது.


திடீரென்று கையில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு மற்றும் 2-3 குளவிகள்/தேனீக்கள் ஒன்றாக கொட்டியது போன்ற ஒரு வலி.  முதலில் கட்டெறும்பு கடித்து இருக்குமோ என்றுதான் எண்ணினேன் ஆனால் கையை இலைச் சருகுகளுக்கிடையே  கொண்டு சென்று எடுத்த அந்த கண்சிமிட்டும் நேரத்தில் கடித்திருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை பாம்பு எதுவும் கடித்து இருக்குமோ என பார்த்தால் கையில் பல் தடமும் இல்லை. வலி மோதிர விரல் நடுவிரல் மற்றும் கட்டை விரலில். 


சுற்றி முற்றி பார்த்தால் எந்த பூச்சியும் தென்படவில்லை. தேனீ கடந்தை குளவி என எதுவும் இல்லை. அரை மணி நேரம் கழித்தும் வலி அடங்க வில்லை. நெறிகட்டுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.  உடனே என் சித்த வைத்திய நண்பருக்கு அழைப்பு விடுத்து என்னவாக இருக்கும் என வினவினேன் அவரும் நிச்சயமாக இது இலைத் தேளாக  இருக்க அதிக வாய்ப்புள்ளது என கூறினர். 




அது என்ன இலைத்தேள்..🤔🤔 


அவரும் விவரித்தார் இது பச்சை நிறத்தில் இருக்கும் இலையின் கீழ் பகுதியில் இருக்கும்  (ஞான திருஷ்டி தான்)  


நானும் களை எடுத்த இடத்தில் சென்று உற்றுநோக்கி தேடியதில் பிரண்டை இலையின் அடிப்பகுதியில் மேலே படத்தில் இருக்கும் கம்பளிப்பூச்சியை பார்த்தேன். இது ஒரு அந்து பூச்சியின் புழுவாகும் (முதல் படத்தில் இருப்பது) பார்த்தவுடன் அதன் அழகில் மயங்கி விட்டேன் அவ்வளவு அழகிய டிசைன்.. ஆனால் அழகு ஆபத்து தானே 😀😀


அதன் உடம்பு பூராவும் முடிகள் கூரிய முள் போன்று இருந்தது. அதனுடன் எந்த ஒரு உராய்வு ஏற்பட்டாலும் உடனடியாக கையில் கடுமையான வலி எடுக்கும் ஏனென்றால் அதன் விஷத்தன்மை அப்படி. 


ஆனால் எதுவும் பயப்படத் தேவையில்லை உடனடி கை வைத்தியமாக வெற்றிலையும் மிளகும் மென்று விழுங்க கூறினார். இல்லையென்றால் தும்பை செடியின் தழை/சிறியாநங்கை/பெரியாநங்கை/ஆடு தீண்டா பாழை/ஆடாதோடை என பல கை வைத்தியங்கள்.. 

பாதிக்கப்பட்ட இடத்தில்  சுண்ணாம்பு/ எருக்கன் பால் தேய்க்குமாறு அறிவுறுத்தினார். 


ஆனால் நான் லைபீரியாவில் வசிப்பதால் இவை எதுவும் என் அருகாமையில் இல்லை.


இவை எதுவும் இல்லாததால் அடுத்த கை மருந்தாக மிளகும் வேப்பிலையும் மென்று விழுங்க கூறினார். 

இரண்டையும் ஒருசேர மென்று விழுங்கவும் அரை மணி நேரத்தில் நெறி கட்டுவது குறைந்துவிட்டது. ஆனால் வலி குறையவில்லை. சுண்ணாம்பு இல்லாததால் பாதிக்கப்பட்ட இடத்தில் நம்  சிறுநீர் வைக்கச் சொன்னார். சிறுநீர் வைத்ததில் பெரிதாக வலி குறையவில்லை 'விண் விண்ணென்று' என்று தெறித்துக் கொண்டிருந்தது. 

அவசரத்திற்கு நம் சிறுநீரும் பாதிக்கப்பட்ட இடத்தில் படும்பொழுது விஷத்தை முறிக்க வல்லது.  


பொதுவாக இதுபோன்ற வலி இருந்தாலும் 24 மணி நேரத்தில் தன்னால் சரியாகிவிடும் என்பது பூச்சிக்கடியில் எழுதப்படாத விதி. 


(இதற்கு நடுவில் இந்த விஷயத்தை கேட்டு பதறிய என் மனைவியிடம் இருந்து ஏகப்பட்ட  பேச்சுகள் வேற 😀😀 )


இரண்டு மணி நேரம் ஆகியும் வலி குறையாததால் லைபீரிய நண்பரின் உதவியை நாடினேன். இங்கு இவர்களது கை வைத்தியம் இதுபோன்ற வலிக்கு நிவாரணமாக அந்த கம்பளிப் பூச்சியின் எச்சத்தை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் நிவாரணம் கிடைக்கும் எனக் கூறினார். 


திரும்பவும் செடியில் போய் தேடினால் கம்பளிப்பூச்சியை காணோம்.. ஐந்து நிமிட தேடலுக்குப் பின் அந்த கம்பளிப் பூச்சியின் பங்காளியான இன்னொரு கம்பளிப்பூச்சியை கண்டுகொண்டேன் (இரண்டாம் படத்தில் இருப்பது)

நண்பரும் விரைவாக அந்த கம்பளிப்பூச்சியை நசுக்கி அதன் எச்சங்களை என் விரல்களில் தேய்த்து விட்டார். இதை தேய்த்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் அதுவரை விண் விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்த வலி மெதுவாக குறைய தொடங்கியது. அந்த இடத்தில் அதுவரை நிலவிய உஷ்ணம் குறைந்தது.


அரை மணி நேரத்தில் வலி முற்றிலுமாக காணாமல் போனது. 


கை வைத்தியத்தை தெரிந்து கொள்வோம்.. மிளகும் வெற்றிலையும் எப்பேர்ப்பட்ட விஷக்கடியையும் முறித்துவிடும்.. பாதிக்கப்பட்ட இடத்தில் சுண்ணாம்பு அல்லது எருக்கம்பால்.. 


உங்களுக்கு தெரிந்த கைவைத்தியம் இருந்தாலும் கீழே குறிப்பிடுங்கள்.

மிகவும் நன்றி  🙏


Couldn't identify the species though.. Closely related to Nettle slug caterpillar