குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள் giving feedback without hurting

 நண்பர் ஒருவர்  தனது இன்னொரு நண்பரை விருந்துக்கு அழைத்து தடபுடலாக விருந்து அளித்தார்.

விருந்து முடிந்ததும் தாம்பூலமும் அளித்தார்.


பின்  விருந்து உண்டவரிடம்   "தளிகை( சமையல் ) எப்படி இருந்தது "

என்று கேட்டார்.


அதற்கு  அவர்  சிரித்துக் கொண்டே


" கண்ணமுது  கோவில் ,

கறியமுது  விண்ணகர் ,

அன்னமுது  வில்லிப் புத்தூர் 

ஆனதே ,

எண்ணும் சாற்றமுது  மல்லை ,

குழம்புமது  குருகூர் ,

பருப்பதனில்  திருமலையே  , பார் "


என்றார்.


உடனே நமது நண்பர் 

 "ஆஹா நம் வீட்டுச் சமையல் திவ்ய தேசங்களுக்கு ஒப்பாக அருமையாக

இருக்கிறது என்று கூறி விட்டாரே  "என்று

மிக மகிழ்ச்சி அடைந்தார்.


இருந்தாலும் அந்தப் பாடலின் உண்மைப் பொருள் அறிய விரும்பிய அவர்

இன்னொரு வைணவ நண்பரிடம் கேட்டார்.


இதோ அந்த வைணவ நண்பர் கூறிய

பொருள்.


கண்ணமுது என்றால் பாயசம்.

ஸ்ரீரங்கம்  கோவிலில்  பாயசம் மண்சட்டியில்தான் வைப்பார்களாம்.

அதனால்  அடியில் சற்று அடிப் பிடித்து

இருக்குமாம். அது போல் நண்பர் வீட்டுப் பாயசமும் சற்று அடிப் பிடித்து  

இருந்ததாம்.


கறியமுது  என்றால் காய்கறிகள்.

விண்ணகரில் இருப்பவன்  உப்பிலியப்பன். அவனுக்கு நைவேத்தியம் எல்லாமே  உப்பில்லாப் பண்டம்தான்.

அதாவது கறியமுதில் உப்பில்லை

என்பதே கறியமுது விண்ணகர்.


அன்னமது வில்லிப் புத்தூர்.

ஸ்ரீ வில்லிப் புத்தூர் கோவிலில் அன்னம் குழைந்திருக்குமாம்.

அது போல் நண்பர் வீட்டு சாதம் குழைந்துள்ளது.


சாற்றமுது மல்லை.

மல்லை  என்றால் கடல்.

கடல் நீர் உப்பு.

இங்கும்  சாற்றமுது ( ரசம் .நீராகத்தானே இருக்கும் ).அதில்  உப்பு அதிகம்.


குழம்பது குருகூர்.

குருகூர்  என்றாலே  புளி.

அதாவது குழம்பில் புளி அதிகம்.


பருப்பதில் திருமலை.

திருமலை எங்கும் கல்தான்.

இங்கும் பருப்பு முழுதும் கல்.


பாடல்  எப்படி ?

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக

கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள்.இதுதான் அக்கால மரபு.

இதைப் படித்ததும் எனக்கு மிகப் பிடித்தது.இதோ பகிர்ந்தேன் உங்களிடம்.

மழை பற்றிய சகுனங்கள் When rain will come? What happens before rain?

 மழை பற்றிய சகுனங்கள்...

----------------------------------------

கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும்.


1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை

2. தட்டான் தாழப் பறந்தால் மழை

3. அந்தி ஈசல் அடை மழை

4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.

5. தவளை கத்தினால் மழை

6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை

7. கொக்கு மேடேறினால் மழை

8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப் பார்த்தால் மழை

9. கழுதை காதை உயர்த்தினால் மழை

10. ஈசல் பறந்தால் மழை

11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை

12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை 

13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை.

14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை

15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை 

16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை

17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை

18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை

19. பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை.

20. மயில்கள் நடனமாடினால் மழை

21. பசுக்கள் சூரியனையும் ,வானத்தையும் பார்த்தால் மழை

22. பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை

23. பசுக்கள் நிழலிடங்களை விட்டு நகர மறுத்தால் மழை

24. நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல மறுத்தால், வானத்தைப் பார்த்து குரைத்தால் மழை

25. சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை

26. மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால் மழை.

27. பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் உண்பதைக் கண்டால் மழை.

28. நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல் நடந்தால் மழை.

29. இரும்பு பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழை

30. சந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் அல்லது சந்திரனின் நிறம் கோழியின் கண் போன்று காணப்பட்டால் மழை.

31. வட கிழக்கில் மின்னல் தோன்றினால் மழை

32. மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனிலிருந்து பிரதி சந்திரன் தோன்றினால் மழை

33. இரவு நேரங்களில் இடி முழங்கினால், பகல் நேரத்தில் மின்னல் அடித்தால், கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை.

நம் இயற்கையை கண்டறிந்த இயற்கை ஞானிகளை போற்றுவோம்.

இது ஆத்மார்ந்த மூத்தோரின் அனுபவ அறிவுரை

 இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...


உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.....


நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். 

     அதையும் பெரிது பண்ணாதே......


உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.....


ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

         ஒவ்வொரு மனிதனும்

         தனித்தனி ஜென்மங்கள்.

         தனித்தனி பிறவிகள்

         தனித்தனி ஆன்மாக்கள்.....


அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.....


அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது......


இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.....


அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்....


அது,

உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், 

நண்பர்களாக இருந்தாலும், 

கணவன், மனைவியாக இருந்தாலும், 

பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், 

பேரன் பேத்திகளாக இருந்தாலும், 

எந்த உறவுகளாக இருந்தாலும், 

                       அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.......


எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?


ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.....


அவர்களுக்கு அனுபவம் தான் குரு.....


அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு........


செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும்,

        தான் யார்? தன் குணம் என்ன?

என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்....


நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது..... 


எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.......


நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும், உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும். அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்....


இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.....


உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்....


நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.


மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.....


உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். 


"அழுது சுமப்பதை காட்டிலும், ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்."


தைரியமும் தன்னம்பிக்கையும் தான் 

ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்....


இப்பதிவை பத்திரப்படுத்தி, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பொறுமையாக மீண்டும் மீண்டும் படிக்கவும்...

      ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்...