Showing posts with label அழகப்பன். Show all posts
Showing posts with label அழகப்பன். Show all posts

மாறாத முருகனும் – மாறனும், மாயனும் தமிழ் சிறுகதைகள் தொகுப்பு - அழ.குழ.மா.அழகப்பன் tamil short story by M. Alagappan maaratha Muruganum Maranum mayanum

மாறாத முருகனும் – மாறனும், மாயனும்

-----Alcohol is injurious to health----


"முருகனுக்கு ஒரு பொண்ணு பாருங்க. இப்படியே போச்சுன்னா குடிச்சு கும்மாளமடிச்சு வீணா போயிடுவான்" என்றார் ராகவி கருப்பசாமியிடம்.

அதற்கு கருப்பசாமி, "அவனுக்குலாம் எவன் பொண்ணு கொடுப்பான். யாருகிட்ட போய் பொண்ணு கேட்பேன். புரிஞ்சு தான் பேசுறீயா. எந்த வேலைக்கு போனாலும் 6 மாசம் கூட இருக்க மாட்றான். அவனுக்கு ஒரு பொண்ண கட்டி வச்சு அந்த பொண்ணோட வாழ்க்கையும் பாழாக்க சொல்றியா. அந்த பாவத்தை வேற சுமக்க சொல்றியா. அவன் பாட்டுக்கு இப்படியே இருக்கட்டும்."  என்றார்

      "வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்துட்டு காண்டாமிருகமுனு பேறு வச்சானாம். அது மாதிரில இருக்கு நீங்க சொல்றது, எவனையோ சொல்ற மாதிரி சொல்றீங்க. நம்ம பிள்ளைங்க அவன். அவனுக்கேத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைச்சா,  கண்டிப்பா அவன் நல்லா இருப்பான். போனவாரம் ஜோசியர பார்த்தப்போ அவரு சொன்னாரு அவனுக்கு ஒரு கால்கட்ட போட்டா எல்லாம் சரியாகிடும்னு" என்றார் ராகவி.

     கருப்பசாமி "அதெல்லாம் சரி நாம யார்கிட்ட போய் பொண்ணு கேட்கிறது.  இப்போ யாரு பொண்ணு தரேன்னு நிக்கிறது " என்றார்.

     "ஏங்க அதான் அந்த பத்து பிள்ளைக்காரரு இருக்கார்ல திருச்சில. அவருக்கு 6 பொண்ணுங்க 4 பசங்க. அதில 4 பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. 6 வதா பிறந்த இரட்டை பிள்ளைகள்ள ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆயிருச்சு. இன்னொரு பிள்ளைக்கு இன்னும் பண்ணல. அதுக்கடுத்தும் ஒரு பொண்ணு இருக்கு. இரண்டு பொண்ணுங்கள ஏதாவது ஒரு பொண்ணுக்கு கேளுங்க." என்றார் ராகவி.

         "அட ஆமா, சுப்பிரமணி பொண்ண சொல்றியா, பிள்ளைகளாம் தங்கமான பிள்ளைக. நம்ம பையனுக்கு தருவாங்கலானு தெரியலையே. எப்படி போய் கேட்கிறது?" என்றார் கருப்பசாமி.

          "அடுத்த வாரம் பட்டுக்கோட்டை கல்யாணத்துக்கு அவுங்க வீட்டில எல்லோரும் வருவாங்க அவுங்க அத்தை வீட்டு கல்யாணம் தான். நம்ம மூத்த பசங்கள கூட்டிட்டு போய் பேசுவோம். அவுங்களை எல்லாம் நல்லா தெரியும். நம்ம முருகன்கிட்டையும் கொஞ்சம் பொறுப்பா இருக்க சொல்வோம். பொண்ணு பாக்குறோம்னு சொன்னா சரியாகிடுவான்." என்றார் ராகவி.

         உறவினர் திருமணம் இனிதே முடிகிறது. தாலி கட்டியதும் கருப்பசாமி சுப்பிரமணியை அழைத்து  "எங்க நாலாவது பையனுக்கு வரன் பார்க்கிறோம்.  உங்கள் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா சொன்னாங்க. உங்களுக்கு சம்மதம் என்றால் ஜாதகப் பொருத்தம் பார்க்கலாமா?" என்றார்.

        "அயித்தான் உங்கள் குடும்பத்தை நல்லா தெரியும். உங்க வீட்டுக்கு எங்க பொண்ண கொடுக்கிறதுல எங்களுக்கு சந்தோசம் தான்.  உங்க மூத்த பசங்கள எனக்கு நல்லாவே தெரியும். தங்கமான பிள்ளைக. ஆனால் உங்கள் 4 வது பையனைப் பத்தி சரியா தெரியல. ஆனால் உங்கள் பையன் ஒரு நிலையான வேலையில் இல்லைனு சொல்லிட்டு இருந்தாங்க."

            "ஆமா நீங்க சொல்றது சரிதான் வேலை சரி இல்லை தான். நாங்களும் போய் ஜாதகம் பார்த்தோம். அவனுக்கு கல்யாணம் ஆயிட்டா எல்லாம் சரியாயிடுமாம். நீங்கள் வேணும்னா பையன் ஜாதகம் வாங்கிட்டு போய் பாருங்க பொருத்தம் இருந்தா அடுத்து பேசலாம். உங்களுக்கு சம்மதமா?". என்றார் கருப்பசாமி.

                  "அயித்தான் சரி ஜாதகத்தை கொடுங்க நான் பார்த்துட்டு சொல்றேன்." என்று ஜாதகத்தை வாங்கிக் கொண்டார் சுப்பிரமணி.

                 நான்கு நாட்கள் கழித்து சுப்பிரமணி தொலைபேசியில் கருப்பசாமியை அழைத்து "அயித்தான் வணக்கம், எல்லோரும் நல்லா இருக்கீங்களா சுப்பிரமணி பேசுறேன்."

              மறுமுனையில் "வணக்கம் வணக்கம். எல்லோரும் நல்லா இருக்கோம். அங்கே எல்லாம் எப்படி இருக்கீங்க" என்றார் கருப்பசாமி.

              "நல்லா இருக்கோம் அயித்தான். அப்புறம் ஜாதகத்தை போயி பார்த்தோம். நல்லா இருக்குனு சொன்னாங்க. ஒரு பரிகாரம் பண்ண சொன்னாங்க. அத மட்டும் பண்ணிருங்க. அத முடிச்சுட்டு நீங்கள்  ஒரு நல்ல நாள் பார்த்து பொண்ணு பார்க்க வாங்க" என்றார் சுப்பிரமணி.

              "ரொம்ப மகிழ்ச்சி. கண்டிப்பா நல்ல நாள் பார்த்து வரோம்." என்றார் கருப்பசாமி.

                பத்து நாட்கள் கழித்து  கருப்பசாமி வீட்டில் எல்லோரும் ஒரு மகேந்திரா வேனில் புறப்பட்டு பொண்ணு பார்க்க போகிறார்கள். 

                  எல்லோரையும் வரவேற்று  பால்கோவா, வடை, தேநீர் என்று பெண் வீட்டார் கொடுக்க இரு குடும்பத்தாரும் மகிழ்வோடு சம்பந்தத்தை சம்மதித்தனர். 

                 முருகன் பொறுப்பாக மாறினான். தனத்திற்கும் முருகனுக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. குடிக்காமல் தினமும் வேலை முடிந்து 6 மணிக்கெல்லாம் வந்து விடுவான்.

                  இரண்டு மாதங்கள் பிறகு ‌தனம் கருவுற்றிருக்கிறதா உறுதி செய்றாங்க. 

                 மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் முருகன் நேரத்தில் வருவதை கைவிடுகிறான். கொஞ்சம் கொஞ்சமாக தாமதமாக வந்தவன் மறுபடியும் குடிக்கு அடிமையானான். 

                 தனத்திற்கு அப்போது தான் அவன் ஒரு குடிகாரன் என்று தெரியவந்தது. தினமும் அழுதுகொண்டே சரியாக சாப்பிடாமல் வருந்தி காலத்தை ஓட்டுகிறாள். 

                   இந்த கொடுமையை எல்லாம் பார்த்து கருப்பசாமி பலகீனமாகி இறந்து விடுகிறார்.  சிறிது நாட்களில் கணவர் இறந்தது, தன் பையன் இப்படி முழு குடிகாரனாக மாறியது, தன் மருமகளின் வாழ்க்கை வீணாகி போனதற்கு நாம் தான் காரணம் என்ற எண்ணம் இவையெல்லாம் மீளாத் துயரத்தை ஏற்படுத்தி  ராகவியும் இறந்து விடுகிறார். பிறகு சிறிது நாட்களில் தனம் அம்மா வீட்டிற்கே சொல்கிறார். கருத்தரித்து எட்டு மாதங்கள் முடியும் போதே குறைப்பிரசவத்தில் ஒரு ஆண் மகனை ஈன்றெடுக்கிறாள் தனம். அந்த குழந்தைக்கு மாயன் என்று பெயர் சூட்டுகின்றனர் "இந்த குழந்தையை எப்படி வளர்ப்பேன்" என்று தெரியலையே என்று அழுகிறாள் தனம். தனத்தின் தாய் ஆறுதல் கொடுத்து ஊட்டமிக்க உணவுகளை கொடுக்கிறார். 

       தனத்தின் தம்பி செலவு செய்து வீசா எடுத்து கொடுத்து முருகனை மலேசியாவிற்கு கூட்டிச் செல்கிறான். முருகன் ஒரு மாதம் கூட அங்கே முழுசா இல்லை. திரும்பி வந்து விட்டான். செலவு செய்த பணமனைத்தும் வீணாகி போனது. சிறிது நாட்களில் இன்னொரு குழந்தையும் பிறக்கிறது. அதற்கு மாறன் என்று பெயர் சூட்டுகின்றனர். இப்படியே ஐந்து வருடங்கள் ஓடின. 

         அம்மா வீட்டில் இருப்பதால் அடிக்கடி குடித்து விட்டு வரும் முருகனால் மனத் தாபங்கள் வருவதால் எங்கேயாவது சென்று விடலாம் என்று தன் பிள்ளை கணவரோடு கண்டனூருக்கு செல்கிறாள். 

       கண்டனூரில் அரசுப் பள்ளியில் மாயனையும் மாறனையும் தனம் சேர்த்து விடுகிறாள். மாறனும் மாயனும் சராசரியாக படித்தார்கள். மாறன் விளையாட்டில் நல்லத் திறமையாக இருந்தான். தனிக்குடித்தனம் வந்த பிறகு முழுக்குடி தினம் என்று இருந்தான் முருகன். வீட்டு வாடகை குறைவு தான். தனமும் சிக்கனமாக குடும்பத்தை நடத்துவாள். இருந்தாலும் அவர்களுக்கு முருகன் கொடுக்கும் பணம் பத்தாது. 

தினம் குடிக்கும் முருகன்

சினம் கொள்ளாது

மனம் நொந்து

தனம் தன் குடும்பத்தை நடத்தினாள். வீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய தனம் இரண்டு மூன்று வீடுகளில் பாத்திரம் கழுவுவது துணி துவைப்பது சமைப்பது என்று வீட்டு வேலைகளை பார்த்து சம்பாதித்து அதில் குடும்பத்தை நடத்தினாள். மாயனும் மாறனும் தெருவில் இருந்த நாய்க்குட்டியை எடுத்து வந்து வீட்டில் வளர்த்தனர். தனம் திட்டுவாள் "உங்கள வளக்குறதே பெருசு. இதில இந்த நாய்க்குட்டியை வேற வளக்கனுமா " என்று.

      அதற்கு "தினமும் குடிச்சிட்டு வர அப்பாவை வளர்க்குற இந்த நாய்க்குட்டிக்கு சோறு போட மாட்டியா" என்பார்கள் மாறனும் மாயனும். 

    "டேய் அப்பாவ அப்படிலாம் சொல்லக் கூடாது" என்பாள் தனம். என்ன தான் கணவன் தவறு செய்தாலும் அடுத்தவர் திட்டுவதை ஏற்றுக் கொள்ள மாட்டாள். 

        தனம் மாறனிடம் "நீ பெரியவனானதும் என்னவாவாய்" என்று கேட்கிறாள். அதற்கு மாறன் "பெரியவன் ஆனதும் போலீஸ் ஆகனும்" என்கிறான். "போலீஸ் ஆகி என்ன செய்வ" என்றாள் தனம். "துப்பாக்கி வச்சு கெட்டவங்கள சுடணும்" என்றான். தனம் சிரித்தாள். சிறிது நேரம் கழித்து "முதல்ல எங்கப்பாவ தான் சுடுவேன்" என்றான். "ஏய் ஏண்டா அவர சுடுவ. அவரு என்ன கெட்டவரா" என்றாள் தனம். "ஆமா, தினமும் குடிச்சிட்டு வந்து உன்னை அழுக வைக்கிறாருல்ல" என்று சொன்னான். அதை கேட்டதும் தனம் பூரித்து அவனை கட்டிக் கொள்கிறாள். அப்போது அவனுக்கு 6 வயசு கூட இருக்காது. 

     தீபாவளிக்கு ட்ரஸ் மற்றும் வேறு ஏதாவது படிப்பிற்கு தேவையானதை அவர்களுடைய பெரியப்பா இடையிடையே வாங்கித் தருவார். அப்போது அவர்களிடம் அப்பாவைப் பற்றி பேசும் போதும் அந்த ட்ரஸ் பணம் வாங்கும் போதும் ரொம்பவே சங்கடப் படுவார்கள் மாறனும் மாயனும். ஒரு கட்டத்தில் தாங்கள் செல்வதை முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்பார்கள்.

      மாயனும் மாறனும் சிறு வயதிலேயே பெரிய மனிதர்கள் போல ஏக்கத்தையும் அவமானத்தையும் சோகத்தையும் பசியையும் தோல்வியையும் என எல்லாவித இன்னல்களையும் அனுபவித்தனர்.  

      இருவருக்கும் புரோட்டா புடிக்கும் என்று ஆளுக்கு இரண்டு என்று தன் கையில் இருக்கும் காசை வைத்து தனம் வாங்கிக் கொடுப்பாள். 

மாறன் "அம்மா அஞ்சு புரோட்டா வாங்கி கொடுத்தா வாங்கி கொடு. இல்லைன்னா வாங்கிக் கொடுக்காத. சும்மா ஆசையை தூண்டி நாக்க சொரண்டி வைக்காத" என்பான்.


      மாயன் ஒன்பதாம் வகுப்பு வந்த பிறகு மாலை நேரத்தில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தான். அவர்கள் இருவரும் படிப்பதை கவனிக்க யாருமில்லை. அவர்கள் படித்து எல்லாப் பாடமும் தேர்ச்சிப் பெறுவதே கடினம் தான். 

      மாறன் கால்பந்து தடகளம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினான். ஆனாலும் அவனின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு என்று யாரும் இல்லை. தனத்திற்கு அன்றாட வீட்டுத் தேவைகளை சரி செய்வதிலே கவனம் இருந்தது. முருகனுக்கு தான் சம்பாதித்து குடித்து வாழ்க்க்கையை சுயநலமாக ஓட்டுவதிலே கவனம் இருந்தது.

        பிள்ளைகளின் தனித்திறமையையோ படிப்பையோ மேம்படுத்த முடியவில்லை. மாயன் 12 ஆம் வகுப்பு முடித்ததும் தன் பெரியம்மா பையன் கோகுல் அண்ணன் உதவியால் ஈரோடு அரசுக் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் சேர்கிறான். தன் அக்கா (பெரியம்மா பொண்ணு ) ஆதிரையின் கணவர் மணிகண்டன் உதவியுடன் ஒரு மருந்தகத்தில் பகுதி நேர வேலைக்கு செல்கிறான். தன் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முயற்சி செய்து அவனே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அம்மா அப்பா தம்பியை அழைத்துச் சென்றான் ஈரோட்டிற்கு. தான் படிக்கும் கல்லூரியிலே தன் தம்பி மாறனையும் சேர்த்து விட்டான் மாயன். கல்லூரியில் படிக்கும் நண்பர்களோடு  மாயனும் மாறனும் கேட்டரிங் வேலைகளுக்கு செல்வார்கள். தனமும் அவர்களோடு சில சமயங்களில் செல்வாள். மாயன் தன் அம்மாவை வீட்டு வேலைக்கு எல்லாம் போகக்கூடாது என்று உறுதியாக சொல்லி விட்டான். மாறன் காவல்துறை அல்லது ராணுவத்தில் எப்படியாவது சேர வேண்டும் என்று சிரத்தை எடுத்து தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து மைதானத்திற்கு சென்று பயிற்சி எடுத்தான். 

      இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டனர். மாயன் பகுதி நேரமாக வேலை பார்த்த அதே மருந்தகத்தில் முழு நேர பணியில் இணைந்தான். ஐந்து வருடங்களுக்கு மேலான அனுபவம் மாயனுக்கு முன்னேற்றத்தை தந்தது. 

      மாறன் இராணுவத்திற்கு ஆள் எடுக்கும் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு உடற்தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பணியில் இணைந்தான். இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்கு பின்னர் சியாச்சின் குளிரில் மிகவும் கஷ்டப்பட்டான். குறி வைத்து சுடுவதில் வல்லவனாக இருந்ததால் மாறன் துப்பாக்கி வீரன் (Gunner) ஆக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தான். 

      மாயன் மருந்தகத்தில் மேலாளருக்கு அடுத்த நிலையில் இருந்தான். மேலாளருக்கு வேலைப் பளு அதிகரிக்க வேலையை விட்டு நிற்க மாயனை மேலாளர் ஆக்கி விட்டார்கள். அது மாயனுக்கே ஆச்சரியமாக இருந்தது. மருந்தகத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும்  ஆச்சரியமாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அவனை விட வயதில் மூத்தவர்களுக்கும் அவனுக்கு முன் வேலையில் சேர்ந்தவர்களுக்கும் மேலாளர் பதவி கொடுக்காமல் மாயனின் சிரத்தை வேலை பார்க்கும் விதம் பழைய மேலாளருக்கு பக்கபலமாக இருந்தது. இவையெல்லாம் தான் அவர்களுடைய நிர்வாகம் அவனை மேலாளர் ஆக்க காரணம்.

       மாறனின் பெரியப்பாவின் மகளின் மகள் (அக்கா மகள்) மாறன் மீது காதல் கொள்கிறாள். அதை மாறனும் ஏற்றுக் கொள்கிறான். இது குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் தெரிய வருகிறது ஆனால் மாறனின் பெரியம்மா தனத்திடம், "உன் புருஷன் ஒரு குடிகாரன். என் பேத்தியை எப்படி கொடுக்க முடியும்" என்று கேட்கிறாள்.

அதற்கு தனம், "குடிகாரன தானே எனக்கு நீங்கள் கட்டி வச்சிங்க. குடும்பத்தை கூட பார்த்துக்க துப்புல்லாதவருக்கு பொண்ணு கேட்டு அன்னைக்கு நீங்களும் தானே வந்தீங்க. இன்னைக்கு நாட்டையே பாத்துக்குற அளவுக்கு என் பிள்ளையை வளர்த்து வச்சிருக்கேன் பொண்ணு கொடுக்க முடியாது என்று சொல்றீங்க. என் பையன் கல்யாணம் பண்ணி அவன் தானே வாழ்க்கை நடத்த போறான். நீங்க ஏன் எனக்கு குடிகாரன கட்டி வச்சிங்க. உங்கள் வீட்டு பொண்ணுங்களுக்கு மாப்பிள்ளையோட அப்பா கூட குடிகாரனா இருக்கக் கூடாது. ஊரான் வீட்டு பொண்ணுங்களுக்கு மாப்பிள்ளையே குடிகாரனா இருந்தாலும் பரவாயில்லை. கல்யாணத்துக்கு அப்புறம் அவன் சரியா வந்திருவானு சொல்றீங்க. அவரை கட்டிகிட்டு என் பிள்ளைகளும் நானும் வாயைக் கட்டி வயித்த கட்டி வாழ்ந்துருக்கோம். விளையாடுற வயசிலே என் பிள்ளைகள் வேலைக்கு போனாங்க."  என்று சொல்லி அழுகிறாள். 

         மாறனின் பெரியம்மா‌ "தனம் நான் என்னடி பண்ணுவேன். உனக்கு கல்யாணம் நடந்தப்பவும்  நான் முடிவெடுக்கிற நிலையில் இல்லை. இப்போ என் பேத்திக்கு கல்யாணம் நடக்க போறதுக்கும் முடிவெடுக்கிற நிலையில் நான் இல்லை. புரிஞ்சுக்க. என் மருமகன் நல்லா சம்பாதித்து சொத்து சேர்த்து வச்சிருக்காரு. என் பிள்ளையை நல்ல வசதியான நல்ல பாரம்பரியமான குடும்பத்தில் கொடுக்கனும்னு சொல்றாரு. இந்த விசயம் தெரிந்ததும் ரொம்ப கோபப் படுறாரு."  என்றாள்.

         "சரி‌ நான் வரேன்" என்று அந்த இடத்தை விட்டு அழுதுகிட்டே போனாள் தனம். 

           

           மாயன் மாறனிடம்," நம்மள மாதிரி யாரும் கஷ்டப்படக் கூடாதுடா." 

அதுக்கு மாறன், "கண்டிப்பாடா, நம்ம கல்யாணம் பண்ணா நல்ல புருசனாவும் நமக்கு குழந்தை பிறந்தா நல்ல அப்பாவாகவும் இருக்கணும் டா"  என்றான். மாயன் சிரித்துக் கொண்டே"நமக்கு யாருடா பொண்ணு தரேன்னு சொன்ன" என்றான்.  மாறன் "ஆமா டா அன்னைக்கு அவுங்க அப்பா நல்லவருனு நம்ம அப்பாவுக்கு பொண்ணு கொடுத்தாரு சுப்பிரமணி. இன்னைக்கு நம்ம அப்பா குடிகாரனு சொல்லி எவனும் தரமுடியாதுனு சொல்றானுங்க".

           "டேய் உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா ஆவூன்னா எங்க அப்பாவையும் உங்க அப்பாவையும் திட்டுறதே பொழப்பா போச்சு. போங்கடா போய் வேறு வேலை இருந்தா பாருங்கடா" என்று மனதுக்குள் வருத்தத்துடன் வெளியே சிரித்துக்கொண்டே சொன்னாள் தனம். 

           "டேய் தனத்துக்கு கோபம் வந்துருச்சு டா. வாடா போயிடலாம்" என்று சொல்லி தன் பைகளை எடுத்துக் கொண்டு விடுமுறை முடிந்து கிளம்புகிறான் மாறன். வழியனுப்ப கிளம்புகிறான் மாயன். 

       மாறன் கிளம்பிப் போன திசையில் இருந்து விழி அகலாமல் பார்த்தாள் தனம். 

                  வன்மையான துப்பாக்கியை தன் கரத்தினால் பிடித்த மாறன் மென்மையான தன் காதலியை கரம் பிடிப்பானா என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

           எதுவாயினும் மாயன் ஓர் எல்லையில் தாய்க்காகவும் மாறன் ஓர் எல்லையில் தாய் மண்ணிற்காகவும்....


-

அழ.குழ.மா.அழகப்பன்

சென்னை


 

"நண்பேன்டா" - சிறுகதை அழ.குழ.மா.அழகப்பன், சென்னை Nanbenda a short story about friendship in Tamil

 "நண்பேன்டா" - சிறுகதை




கதிர், மோகன், யுவன், சந்திரன், நளன் ஐவரும் நல்ல நண்பர்கள்.

ஐவரும் சதுரகிரி மலையில் மலையேற்றம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தனர். மோகன் ஏற்கனவே நிறைய முறை சென்றிருந்ததால் அவன் தான் தலைமை தாங்கி அழைத்துச் சென்றான். மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் நேர் வழியில் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.

மோகன் மாற்றுப் பாதையில் செல்ல அனைவரையும் பணித்தான்.

"மழையினால் ஆபத்து வரும்ன்னு தானே அனுமதிக்கல. அப்புறம் எதுக்குடா ரிஸ்க்" என்றான் நளன். இயல்பாகவே நளன் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவன்.

"அதெல்லாம் ஒன்னும் பயப்பட வேண்டாம் நேர் வழியில் மழை பெய்யுறப்போ காட்டாற்று வெள்ளம் திடிரென ஏற்பட்டு நிறைய உயிரிழப்புகள் ஏற்படும். அதற்கு தான் அனுமதிப்பதில்லை. ஆனால் நம் செல்லும் பாதையில் தண்ணீர் வராது. ஏற்கனவே மழைக்காலத்தில் இந்த பாதை வழியாக தான் செல்வோம். டேய் பயப்படாதே, எல்லோரும் சேர்ந்தே போவோம். மேலே ஏறி திரும்பி கீழே வர்றது வரை கண்டிப்பா நான் கூடவே வருவேன் டா. எல்லோரும் டார்ச் லைட் பத்திரமா வச்சுக்கோங்க. நான் உங்களுக்கு பின்னாடியே வர்றேன். டார்ச் லைட்டை மேலே காட்டாதீங்க. வேறு ஏதாவது மிருகத்துக்கு தொந்தரவு செய்ய கூடாது."  என்றான் மோகன்.

"டேய் என்னடா மிருகம் லாம் வரும்ன்னு சொல்ற. நான் இங்கேயே இருக்கேன் டா. நீங்க போயிட்டு வாங்கடா." என்றான் நளன்.

 

"அவன் தான் கூட இருக்கான்ல. இங்கே நீ எப்படி தனியா இருப்ப" என்றான் கதிர்.

"ஆமாடா யானைலாம் சில சமயம் அடிவாரத்தில் இறங்கி வரும்டா. நீ எங்களோடயே வந்துரு. சரியா?" என்றான் மோகன்.

"என்னங்கடா உங்களோட அக்கப்போரா இருக்கு. சதுரகிரி ஆண்டவா என்னைய எப்படியாவது இவனுங்க கிட்ட இருந்து காப்பாத்துப்பா " என்றான் நளன்.

யுவன் "பாத்தியாடா இவனை நம்மட்ட இருந்து காப்பாத்தனுமாம். எப்படி சொல்றான் பாருங்க டா" என்றான்.‌

"இவனைஅடுத்த தடவை வரும் போது கழட்டி விட்டுருவோம்டா" என்றான் சந்திரன்.

"டேய் நீங்க என்ன என்னையை விட்டுட்டு வர்றது, நானே வரமாட்டேன் டா. இது தான்  கடைசி." என்றான் நளன்.

"இப்ப இப்படி தான் சொல்லுவ மேலே போயிட்டு திரும்பி வந்த பிறகு திரும்ப வரணும்னு நீயே கண்டிப்பா சொல்லுவ. நிறைய பேர் ஏறும் போது மலைச்சு போய் அப்படி தான் சொல்லுவாங்க. இறங்குனதுக்கு பிறகு அப்பாடா ஒரு வழியா இறங்கியாச்சு கால்வலி தான் இரண்டு நாள் இருக்கும் போலனு சொல்வாங்க. அப்புறம் இரண்டு நாள் கழித்து அடுத்த வருடம் திருப்பி போவோம்னு சொல்வாங்க" என்றான் மோகன்.

"நீ என்ன சொன்னாலும் சரி நான் டுத்தெல்லாம் இங்கே வர மாட்டேன். அது உன் கூடனா எங்கேயும் வரவே மாட்டேன். உன்னை நம்பி வந்தேன் பாருசரி சரி திட்றேனு என்னைய எங்கேயும் விட்டுட்டு போயிறாதேடா, எங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பிள்ளை டா. என் கூடவே வா. எனக்கு முன்னாடி இரண்டு பேரு பின்னாடி இரண்டு பேர் வாங்க சரியா" என்றான் நளன்.

"செந்நாய் வந்துச்சுனா நடுவில இருக்கவுங்கல தான் பிடிக்கும். பரவாயில்லையா" என்றான் யுவன்.

"பி பாஸிட்டிவ் ரத்தம் செந்நாயிக்கு பிடிக்காதுடா" என்றான் நளன்.

"டேய் நீ பேசுறத பார்த்தா பி பாஸிட்டிவ் மாதிரி தெரியல. நெகடிவா பேசுற நெகடிவ் குருப் இருக்கும் னு நினைக்கிறேன்" என்றான் சந்திரன்.

"டேய் ரத்தத்தை பத்தியே பேசாதீங்க டா ஏதாவது அனிமல் வந்துற போகுது" என்றான் நளன்.

அனைவரும் சிரித்தனர்இப்படியே பேசிக்கொண்டே மலையை பாதியை கடந்து விட்டார்கள்

நளன் "கால் வலிக்கிறது கொஞ்சம் நேரம் உட்கார்ந்து இருப்போம் டா " என்றான்.

சந்திரன்‌  "உட்கார்ந்தா நடக்க முடியாது. நீ உட்கார்ந்துட்டு வா நாங்க அப்படியே பொடிநடையா நடக்குறோம் என்றான் அவனோடு கதிரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

"டேய் நீங்க இப்படியே கொஞ்ச தூரம் போனா ஒரு பாறை இருக்கும் டா. அதுக்கு அடியுல ஒரு குகை மாதிரி இருக்கும். அங்கே போயி படுத்துருங்க. நான் வந்து எழுப்பி விடுறேன். எப்படியும் நாங்க வர்றதுக்கு இரண்டு மணி நேரம் ஆயிரும் போல இவனுங்க உட்கார்ந்து உட்கார்ந்து வர்றத பார்த்தா" என்றான் மோகன்.

 

      மழை மேகம் சூழ்ந்து இருந்ததால் நிலவும் விண்மீன்களும் இல்லாமல் அந்தகாரம் சூழ்ந்து இருந்தது. பக்கத்தில் யார் இருந்தாலும் தெரியாது. நளனோடு யுவனும் மோகனும் இருந்தனர். ஒருத்தர் பின்னர் ஒருத்தர் போய்க் கொண்டு இருந்தனர். யுவனின் டார்ச் லைட் அணைந்தது. நளன் மற்றும் மோகனின் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒரு அரை கிலோ மீட்டர் வரை நடந்து சென்றனர். பிறகு நளனின் டார்ச் லைட் அணைந்தது. இப்போது மோகனின் டார்ச் லைட் மட்டுமே இருந்தது. அதன் வெளிச்சத்தில் மூவரும் நடந்து கொண்டு இருந்தனர். நளனுக்கு இருள் மற்றும் இரவு நேரத்து ஒலியெழுப்பும் பூச்சிகளின் சத்தம் பயத்தைக் கொடுத்தது. காற்று வீசும் போதெல்லாம் ஆங்காங்கே இருக்கும் மரங்களின் அசைவும் அசைவில் ஏற்படும் சத்தமும் சற்றே பயமுறுத்தியது

"டேய் மச்சி எனக்கு பயமா இருக்கு டா என் கூடவே வாடா" என்று மோகனிடம் மெதுவாக கூறினான் நளன்.

"டேய் கவலைப்படாதே நான் உன் கூட தான் இருக்கேன். பயப்படாம போ " என்றான் மோகன்

தொண்டை வறண்டு இருந்ததால் நளன் தன் முதுகில் வைத்திருந்த பையினுள் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து இருந்த கொஞ்சம் தண்ணீரையும் குடித்து விட்டு தூக்கி எறிந்தான். பாட்டில் விழுந்த சத்தம் கேட்டது. அந்தகாரத்தினுள் நளனின் அசைவுகளை கணித்து அவன் தான் எதையோ தூக்கி எறிந்து இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டான் மோகன்

"டேய் மலையில் எதுக்குடா பிளாஸ்டிக் பாட்டிலை தூக்கிப் போடுற. ஊர்ல தான் பிளாஸ்டிக் குப்பைகளை எல்லோரும் சேர்க்கிறோம் இங்கேயும் போட்டு இங்கே இருக்குற உயிர்களையும் துன்புறுத்தனுமா. நான் ஏற்கனவே சொன்னேன்ல எந்த குப்பையையும் போடக் கூடாதுன்னு. குறிப்பா பிளாஸ்டிக் போடக் கூடாதுன்னு.‌ ஏன்டா அது யார் மண்டையிலையும் ஏற மாட்டுது. ஒழுங்கா அத தேடி எடுத்து பையில் வைடா" என்றான் மோகன்

"டேய் உனக்கு வேற வேலையே இல்லையா? காலி பாட்டிலை தூக்கி பையில் வைக்க சொல்ற. வாடா நானே இருட்டுல பயந்துகிட்டு இருக்கேன். நீ வேற" என்று நளன் சொல்லிக்கொண்டே அவன் எறிந்த பாட்டிலின் மீது காலை வைத்து அது வழுக்கி விட சற்று தடுமாறி கீழே விழும் போது பின்னால் இருந்த மோகன் வேகமாக பிடித்து இழுத்தான்

மோகன் வேகமாக செயல்படும் அவசரத்தில் அவன் கையில் இருந்த டார்ச் லைட் நழுவி விழுந்து பாறையில் உருண்டோட "யுவா நீ அவன் கையை பிடித்து கூட்டிட்டு போ. நான் டார்ச்சை எடுத்துட்டு வரேன்" என்றான்

"நீ வாடா நாங்க வெயிட் பண்றோம்." என்றான் நளன். "நீ முதல்ல போடா" என்று நளனிடம் திரும்பி நின்று கோபமாக கத்திவிட்டு போனான் மோகன். உருண்டுக் கொண்டிருந்த டார்ச் லைட் அணைந்தது. அந்த நேரத்தில் நளனும் யுவனும் நடக்க ஆரம்பித்தனர். மெதுவாகவே நடக்க ஆரம்பித்தனர்.

திடீரென்று அவர்களுக்கு முன்னால் ஒரு வெளிச்சம் தெரிந்தது. நளன் பயந்து 'யாராக இருக்கும்' என்று யோசித்துக் கொண்டே "டேய் அது யாருடா" என்று யுவனிடம் கேட்டான்.

"டேய் கதிர் இல்லைனா சந்திரனா இருக்கும்டா" என்று சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் மீது அந்த ஒளி திரும்பியது.

 "டேய் என்னடா பண்றீங்க இவ்வளோ நேரம் சீக்கிரம் வாங்கடா நான் மேலே வந்துட்டேன்" என்று மோகன் கத்தினான். "டேய் எப்படிடா எங்கள தாண்டி போன" என்றான் யுவன்.‌ "குறுக்கு வழி ஒன்னு இருக்கு. நீங்க மேலே ஏறி இருப்பீங்கனு வந்தா இன்னும் அங்கே நிற்கிறீங்க. சீக்கிரம் வாங்கடா. நான் கதிரையும் சந்திரனையும் பார்த்துட்டு வரேன்."  என்றான் மோகன்.

"டேய் இருடா நாங்களும் வர்றோம்" என்று கூறிக்கொண்டே நடையில் வேகம் கூட்டினான் யுவன். பின்னாடி சர சரனு ஏதோ சத்தம் கேட்க பயந்த நளன், யுவனின் வேகத்தோடு இணைந்தான்.

குகையில் சந்திரனும் கதிரும் குளிரில் நடுங்கிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென்று நரி ஊளையிடும் சத்தம் கேட்டது. சட்டென்று சந்திரன் எழுந்து கதிரை எழுப்பி விட்டான்.

தூக்க கலக்கத்தில் கதிர் "டேய் எதுக்குடா எழுப்பி விட்ட" என்றான். "நரி ஊளை" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் ஊளை சத்தம் கேட்டது. தூக்கம் கலைந்து கதிரும் ஏதோ உணர தொடங்கினான். அழுகிய முட்டை வாடை திடீரென்று வந்தது. காத்து விசு விசுனு அடிக்குது

"எலியோ ஏதோ இங்கே பக்கத்துல செத்துக் கிடக்குது போல காத்து அடிக்கவும் நாறுது" என்றான் கதிர். "டேய் மோகன் சொன்னானு இங்கே வந்துட்டோம். எனக்கு பயமா இருக்குடா பேசாமா அவனுங்களோடவே வந்திருக்கலாம் போல" என்றான் சந்திரன்.

தட தட னு யாரோ நடக்குற மாதிரியே சத்தம் கேட்டது இருவருக்கும். "மோகன் பேச்சை கேட்டுட்டு அவன் கூட வந்தது தப்பா போச்சு" என்றான் சந்திரன். "அவன் என்னடா பண்ணுவான் நளன் நடக்கவே மாட்றான். அவனை மட்டும் விட்டுட்டும் வர முடியாதுல.‌" என்றான் கதிர்.‌

"டேய் என்னடா என்னைய திட்றீங்களா" என்று சத்தம் போட்டான் குகைக்கு வெளியே இருந்து மோகன். "டேய் மச்சி வந்துட்டியா, நாங்க பயந்துட்டோம் டா. நரி ஊளையிட்டுச்சு, குளிர் வேற ரொம்ப இருந்துச்சு, காத்து வேற விசுவிசுனு அடிச்சுச்சு. அதான் பேசிட்டு இருந்தோம்" என்றான்சந்திரன்.

"ஆமாடா ரொம்ப பயமா இருந்துச்சு." என்றான் கதிர்.

"சரி சரி சீக்கிரம் வாங்கடா மழை அடிச்சு ஊத்தப் போகுது. பக்கத்தில தான் கோயில் இருக்கு.‌ சீக்கரம் சாமியை கும்பிட்டுட்டு போகலாம்." என்றான் மோகன்.‌

கதிரும் சந்திரனும் வெளியே வருவதற்குள் மோகன் மேல் நோக்கி முன்னேறினான். வெளியே வந்த சந்திரனும் கதிரும் தன் கையில் வைத்திருந்த தண்ணீர் எடுத்து முகம் கழுவிட்டு மோகன் போன திசையில் நடக்கலாயினர். அவர்கள் இருவரின் டார்ச் லைட்டும் வேலை செய்யவில்லை.

 

கோயிலை அடைந்தனர். ஆனால் யாரையும் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததாலும் மழை பெய்த காரணத்தினாலும் கோயில் பூட்டியிருந்தது.

வெளியே இருந்து கும்பிட்டவாறு கிளம்பினர். "உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா ஒருத்தரை பார்த்தேன் நளனோட அம்மா அப்பா அவனை தேடி வந்திருக்காங்கலாம்டா மலையடிவாரத்தில் இருக்காங்களாம். நான் முன்னாடி போறேன் டா." இருவரிடமும் சொன்னான் மோகன்.

"என்னடா சொல்ற என்னால நம்பவே முடியல" என்றான் சந்திரன். "ஆமாடா எதுக்கு வந்தாங்கனு தெரியல நான் முன்னாடி போறேன்." என்று நகர்ந்தான் மோகன்.

     

         மழை தூவ ஆரம்பித்தது. சந்திரனும் கதிரும் அவன் பின்னாலே தொடர்ந்தனர். நளன் ஒரு பாறையில் வழுக்கி விழுற நேரத்தில சரியா மோகன் போய் பிடிச்சுறான்.‌

"பாத்துடா" என்றான்மோகன்.

"போடா, எதுக்குடா என்னை பிடிச்ச இவ்வளோ நேரம் விட்டுட்டு போயிட்ட. நான் பயந்துகிட்டே இருந்தேன்" என்றான் நளன்

"டேய் உன்னை தனியா விட்டுட்டு போன மாதிரி சொல்ற. யுவன் கூட தான வர" என்றான் மோகன்.

"சரி சரி சீக்கிரம் போலாம் கீழே என்று திரும்பச் சொன்னான் மோகன்.

" டேய் என்னடா நீங்க மட்டும் மேலே போயிட்டு கீழே போலாம்னு சொல்ற." என்றான் யுவன்

 "டேய் மேலே கோயில் பூட்டி இருக்குடா. மழையும் பெய்து. இவனோட அம்மா அப்பா இவனை தேடி வந்திருக்காங்களாம்டாஎன்றான் மோகன்.

 "என்னடா சொல்ற எங்கம்மா அப்பா எதுக்கு டா வந்தாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா" என்றான் நளன்.

"சரி பயப்படாதே வா போய் பார்க்கலாம்".

நரி ஊளையிடும் சத்தம் கேட்குது. இரவாடி பூச்சிகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கு.

யுவன் "எனக்கு என்னமோ நம்ம கூட ஏதோ கண்ணுக்கு தெரியாத உருவம் கூட இருக்க மாதிரியே தெரியுதுடா" என்றான். "பயமா இருக்குடா.

நீ வேற ஏன்டா இப்படி சொல்ற." என்றான் நளன்.

அவுங்க மூன்று பேருக்கும் பின்னால் திடுதிடுனு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் சந்திரனும் கதிரும் மூச்சிரைக்க வந்தார்கள்.

"என்னடா ஆச்சு ஏன்டா இப்படி ஓடி வந்திங்க." என்றான் யுவன்.

"இல்லடா நாங்க மோகன் பின்னாடி வந்துக்கிட்டு இருந்தோம். திடீர்னு பின்னாடி யாரோ கூப்பிடுற மாதிரி இருந்துச்சு" திரும்பி கொஞ்ச தூரம் ரெண்டு பேரும் நடந்தோம். அங்கே நளன் விழுந்து கிடந்தான். பயந்து எழுப்பினோம். எந்திருச்சு "ஹாஹாஹா' னு அதிர்ற மாதிரி சிரிச்சுட்டு "நாளைல இருந்து உங்களோட இருக்க மாட்டேனே" னு  சொன்னான். எங்களுக்கு பயமா இருந்துச்சு கொஞ்ச நேரத்தில் அவனை காணோம்டா அதான் வேகமா ஓடி வந்தோம்" என்றான் சந்திரன்.

"டேய் எங்கள பயமுறுத்திட்டு இங்கே வந்துட்ட" என்றான் கதிர்.

"டேய் ஏன்டா எல்லோரும் பயமுறுத்துறீங்க. நான் யுவனோட தான்டா இவ்ளோ நேரமா  இருக்கேன்" என்று அழாத குறையா சொன்னான் நளன்.

"டேய் பயப்படாதே டா நான் இருக்குற வரைக்கும் உனக்கு ஒன்னும் ஆகாது. ஏதோ அவனுங்க பயத்துல சொல்றாங்க. காலைல எல்லாம் சரியா போயிடும்." என்றான் மோகன்.

"அதெல்லாம் இருக்கட்டும் எங்கம்மா அப்பா எதுக்குடா வந்தாங்க?" என்றான் நளன்.

"நான் வேணும்னா முன்னாடி போய் பார்த்துட்டு வரவா" என்றான் மோகன்.

"வேண்டாம் எல்லோரும் சேர்ந்தே போவோம்" என்றான் கதிர்.‌

மோகன் முன்னே செல்ல அடுத்து கதிர் நளன் சந்திரன் யுவன் என்று போய்க் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் அமைதியாக சென்ற பின் மோகன் "என்னடா எல்லோரும் அமைதியா வர்றீங்க, ஏதாவது பேசிட்டே போகலாம்ல" என்றான்.

"எங்களுக்கு மூச்சு வாங்குது நீயே பேசுடா" என்றான் கதிர்.

"எப்பவும் ஒற்றுமையா இருக்கனும்டா.‌ அப்பதான் நிறைய சாதிக்கலாம். பாவம் டா எங்கம்மா அப்பா அவுங்களுக்கு நான் எதுவுமே பெருசா செய்யல" என்றான் மோகன்.

 "டேய் ஏன்டா வருத்தப் படுற இப்போ தான் எல்லோரும் ஓரளவுக்கு செட்டில் ஆயிருக்கோம். அம்மா அப்பாவுக்கு நாம சூப்பரா செய்வோம்டா" என்றான் சந்திரன்.

கொஞ்சம் விடிந்தது. மலையடிவாரமும் நெருங்கியது.

"சரிடா விடிஞ்சுருச்சு பயப்படாம இறங்குங்க பக்கத்தில வந்தாச்சு. நான் போயி நளன் அம்மா அப்பா வை பார்க்கிறேன்." என்று சொல்லி அவன் டார்ச் லைட்டை அணைத்து விட்டு வேகமாக இறங்கினான் மோகன்.

           பொழுது விடிந்தது. அடிவாரத்தை தொட்டனர். "அங்கே பரபரப்பாக அவர்களை பார்த்து நீங்க ஏம்பா மேலே போனீங்க" என்று ஒருவர் சொன்னார்.‌ அருகில் இருந்தவர்கள் சலசலத்தனர். சிறிது நேரம் நடந்து சென்றால் தூரத்தில் மோகனின் அம்மா அப்பா இருந்தாங்க.

"என்னடா மோகனோட அம்மா அப்பா வேற வந்திருக்காங்க. உங்க அம்மா அப்பா வேற வந்தாங்கனு சொன்னான் மோகன்." என்றான் யுவன் நளனிடம்.

"ஆமாடா என்னனு தெரியலையே என்று அவர்கள் அருகில் சென்றால் அவர்கள் தலையில் அடித்து கொண்டு கீழே பார்த்து அழுகிறார்கள். இவர்களுக்கு ஒன்றுமே புரியல. கீழே பார்த்தால் மோகன் கிடந்தான். கதிர் அருகில் இருந்தவர்களை விசாரித்தான் "என்ன ஆச்சு? என்று.

அவர்கள், "நேற்று குறுக்கு வழியில் கொஞ்சம் பேரு மலையேறி போனாங்க. மூன்றாவது மலை ஏறும் போது வழுக்கி  விழுந்து இறந்து கிடந்தான். தகவல் தெரிந்து தூக்கிட்டு வந்தாங்க" என்றார்கள்.

"ஐயா எத்தனை மணி இருக்கும்" யுவன். "அவர் இறந்தது இரவு 11 மணி இருக்கும்" என்றார்கள். எல்லோரும் ஒருத்தர ஒருத்தர் அதிர்ச்சியா பார்க்கிறாங்க.

"11 மணிக்கே இறந்துட்டானா. ஆனால் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வர நம்ம கூடவே இருந்தானேடா. அதும் நமக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் வந்து காப்பாத்தினானே. செத்த பிறகும் அவன் சொன்ன மாதிரியே நம்மள பத்திரமா கூட்டிட்டு வந்தானேடா" என்று அழுகிறான் கதிர்.

அவனோட அம்மா அப்பாவ தான்டா என்னோட அம்மா அப்பானு சொல்லிருக்கான். இனிமே அவுங்களை நான் தான் டா பாத்துக்குவேன்" என்று அழுதான் நளன்.

"அண்ணே அவன் எங்கேணே இறந்து கிடந்தான்" என்று பக்கத்தில் இருந்தவரிடம் சந்திரன் கேட்டான். அவன் மூனாவது மலைகிட்ட ஒரு இடத்தில் பிளாஸ்டிக் பாட்டில் டார்ச் லைட் லாம் கிடந்துச்சு. அது பக்கத்தில் கிடந்தான். பிளாஸ்டிக் பாட்டிலை மிதிச்சு வழுக்கி விழுந்திருக்கலாம்னு சொல்லிக்கிறாங்க" என்றார் அவர்.

"அய்யய்யோ அவன் சாவுக்கு நான் தான் காரணமா" என்று அழுது விளக்கினான் நளன். "என்னால செத்தாலும் என் கூடவே இருந்து பாத்துக்கிட்டானே அவன் விட்டுட்டு போனதுக்கு திட்டுனேனே" என்று அழுது புலம்புகிறான்.

அவர்கள் நான்கு பேருக்கு மட்டுமே மீண்டும் வந்து "நண்பேன்டா" என்று வழக்கமாக சொல்லும் ஒற்றை வார்த்தையை சொல்லி காற்றில் கரைந்தான் மோகன்.

கதை முற்றும். நட்பு முற்றாது

-

அழ.குழ.மா.அழகப்பன்

சென்னை